search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசாரணை காவல்"

    வீட்டு வசதி வாரியத்தில் ஒப்பந்தம் வழங்குவதில் ஊழல் செய்து பாகிஸ்தான் அரசுக்கு சுமார் 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் ஷாபாஸ் ஷரிப் 10 நாள் விசாரணை காவலில் அடைக்கப்பட்டார். #Pakistanhousingscam #Shahbazsharif
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக பதவி வகித்தவர் ஷாபாஸ் ஷரிப். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தம்பியான இவர், நவாஸ் ஷரிப் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பின்னர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியின் தலைவராகவும், தற்போதைய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

    பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக பதவி வகித்தபோது ஷாபாஸ் ஷரிப்புக்கு பல ஊழல்களில் தொடர்பிருப்பதாக முன்னர் குற்றச்சாட்டு எழுந்தது.

    குறிப்பாக, வீட்டு வசதி வாரியம் மூலமாக வீடுகளை கட்டித்தரும் 1400 கோடி ரூபாய் மதிப்பிலான ‘ஆஷியான் வீட்டுவசதி’ திட்டத்தில் ஏற்கனவே  ஒப்பந்தம் பெற்ற நிறுவனத்தை தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்ததாகவும் இதன்மூலம்  ஊழல் செய்து பாகிஸ்தான் அரசுக்கு சுமார் 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் அவருக்கு எதிராக பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.



    முன்னதாக பாகிஸ்தானில் வரும் 14-ம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தலையிடக்கூடும் என்று குற்றம்சாட்டிய போலீசார் தடுப்புக் காவல் சட்டப்படி லாகூர் சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

    இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான ஷாபாஸ் ஷரிப் பலத்த காவலுடன் பொறுப்புடைமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க விரும்புவதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இதனை ஏற்ற நீதிபதி நஜமுல் ஹஸன் 10 நாள் விசாரணை காவலுக்கு அனுமதித்து உத்தரவிட்டார்.   #Pakistanhousingscam #Shahbazsharif
    காஷ்மீரில் கைது செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் பிரிவினவாத அமைப்பின் தலைவர் சையத் சலாஹுதீன் மகனை 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி கோர்ட் அனுமதியளித்தது. #SyedSalahuddin #SyedAhmedShakeel
    புதுடெல்லி:

    ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் வன்முறைகளில் ஈடுபட்டு வரும் பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருவதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இந்நிலையில், ஸ்ரீநகரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று காலை அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற பிரிவினைவாத அமைப்பு தலைவன் சையத் சலாஹுதீனின் இரண்டாவது மகன் சையத் ஷகீல் அகமது(48) என்பவரை அதிகாரிகள் கைது செய்தனர். 

    காஷ்மீரில் இருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட சையத் ஷகீல் அகமதுவை அதிகாரிகள் இன்று டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
     
    அவரிடம் மேற்கொண்டு விசாரிக்க வேண்டியுள்ளதால் தேசிய புலனாய்வு அதிகாரிகளின் விசாரணை காவலுக்கு ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி அவரை செப்டம்பர் பத்தாம் தேதிவரை காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்துள்ளார்.

    கைது செய்யப்பட்ட சையத் ஷகீல் அகமது காஷ்மீர் மருத்துவ அறிவியல் மையத்தில் மூத்த ஆய்வக தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். சையத் சலாஹூதீனின் மற்றொரு மகன் சையத் ஷாகீத்தை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #SyedSalahuddin #SyedAhmedShakeel #HizbulMujahideen 
    முறைகேடான பணப் பரிவர்த்தனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள உபேந்திரா ராயை அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி கோர்ட் அனுமதி அளித்துள்ளது. #Delhicourt #journalistUpendraRai #7daysEDcustody
    புதுடெல்லி:

    டெல்லியின் பிரபல பத்திரிகையாளர் உபேந்திரா ராய் என்பவரை சுமார் 79 கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோத நிதி பரிவர்த்தனை நடத்தியது, போலியான ஆவணங்களை சமர்ப்பித்து விமான நிலைய அனுமதி அடையாள அட்டை பெற்றது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த மாதம் 3-ம் தேதி கைது செய்தனர்.

    இவ்விவகாரத்தில் லக்னோ, நொய்டா, டெல்லி, மும்பை உள்பட 8 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஏர் ஒன் ஏவியேஷன் நிறுவன உரிமையாளர் பிரசுன் ராய் என்பவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

    உபேந்திர ராயிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 5 நாள் காவலில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடைந்த நிலையில் அவரை நீதிமன்ற காவலில் அடைத்தனர். இதற்கிடையில், நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உபேந்திரா ராய் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் பணமோசடி வழக்குப்பதிவு செய்தனர். 

    இந்நிலையில், உபேந்திர ராய் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். தன்னை காவலில் வைத்திருப்பதற்கு இனி அவசியம் இல்லை என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    அதனை விசாரித்த சிறப்பு சி.பி.ஐ நீதிபதி சந்தோஷ் உபேந்திர ராய்க்கு ஜாமின் வழங்கி நேற்று உத்தரவிட்டார். சொந்த ஜாமின் தொகையாக 5 லட்சம் மற்றும் அதே தொகைக்கு இரண்டு பேர் ஜாமின் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், உபேந்திரா ராயிடம் மேற்கொண்டு விசாரிக்க உள்ளதாக பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி கோர்ட்டில் இன்று மீண்டும் முறையீடு செய்தனர்.

    இதன் அடிப்படையில், உபேந்திரா ராயை அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க இன்று மாலை நீதிபதி அனுமதி அளித்துள்ளார். #Delhicourt #journalistUpendraRai #7daysEDcustody
    ×